படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Thursday, December 29, 2011

எங்கே சென்றது நிதானம். எங்கே சென்றது மனிதாபிமானம்.



இளகிய மனம், விபத்து பற்றிய செய்தியை விரும்பாதவர்கள் தயவுசெய்து மேற்கொண்டு படிக்க வேண்டாம்.



இன்று அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக 10 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு கிளம்ப முடிந்தது. வரும் வழியில் சகோதரர் ஒருவர் மோட்டார் வண்டியில் இருந்து தவறி சாலையில் விழுந்துவிட்டார். தலையில் பலமான அடி. அதிகப்படியான உதிரம் வழிந்துகொண்டிருந்தது. சிறு கூட்டம் கூடிவிட்டது. நானும் என்னுடைய நண்பரும் எங்களது வண்டியை நிறுத்திவிட்டு அடிபட்டவரின் அருகில் சென்று பார்த்தோம். அனைவரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தனரே அன்றி ஒருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக நானும் என் நண்பரும் அவரவர் அலை பேசியில் 108யை அழைத்து தகவல் கொடுத்துவிட்டு (அவர்கள் வர ஒரு மணிநேரம் ஆகும் என்று சொன்னதெல்லாம் வேறு கதை... அதைப்பற்றி தனியாக ஒரு இடுக்கையில் பேசுவோம்), அடிப்படவரின் கால் சட்டைப்பையைத் துலாவினோம். ஒரு பையில் அவருடைய அலைபேசியும் மற்றொரு பையில் சில காகிதங்களும் இருந்தன. அவரின் அடையாளம் அலுவலகமுகவரி எதுவும் கிடைக்கப் பெறவில்லை. அருகில் இருந்த ஒருவர் அடிபட்டவரின் அலைபேசியை எடுத்து கடைசியாக பேசிய எண்ணைத் தொடர்பு கொண்டு அடிபட்ட விபரம் இடத்தினை கூறினார். இதற்கிடையில் அந்த வழியில் வரும் வாகனங்களை நிறுத்தி அடிபட்டவரை மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. ஒருவரும் வாகனத்தை நிறுத்த முன்வரவில்லை. ஆட்டோக்களும் கூட அவரை ஏற்ற மறுத்துச் சென்றுவிட்டனர். இப்படியாக 10 நிமிடங்கள் சென்றுவிட்டன. அவரிடம் உயிர் இருந்துகொண்டுதான் இருந்தது ஆனால் உதிரமும் தொடர்ந்து வழிந் துகொண்டேயிருந்தது. பின்பு அருகில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அவசர ஊர்தியை அழைத்து வந்து அடிபட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினோம். அவசர ஊர்தி புறப்படும் சமயம்தான் காவல் துறையைச் சார்ந்தவர்கள் வந்தார்கள். அடிபட்டது 10 மணி 15 நிமிடம். 108க்கு தகவல் குடுத்த நேரம் 10 மணி 21 நிமிடம். மீண்டும் 108க்கு பேசிய நேரம் 10 மணி 38 நிமிடம். அப்போது அவர்கள் சொன்னது, அவசர ஊர்தி 10 மணி 25 நிமிடத்திற்கே புறப்பட்டுவிட்டது என்று. வேறொரு தனியார் அவசர ஊர்தியில் அவரை ஏற்றிய நேரம் 10 மணி 45 நிமிடம். இது நடந்தது சென்னையின் மிக முக்கியமான அதிக போக்குவரத்து நிறைந்த சாலை. ஒரு கிலோ மீட்டருக்குள்ளேயே காவல் நிலையம், மருத்துவமனை, அவசர ஊர்தி நிலையம் என சகல வசதியும் உள்ள இடம். இத்தனையிருந்தும் அவரை அவசர ஊர்தியில் ஏற்றவே 30 நிமிடங்கள் ஆகிவிட்டது.



அதன் பின்பு வீடு வரும் வரை என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. ஏதோ தோற்று விட்டதைப் போன்ற வெறுப்பு. நாளை இதே போன்று நமக்கோ நமக்கு தெரிந்தவருக்கோ நடந்தால், இச் சமுதாயம் இப்படித்தானே வேடிக்கை பார்க்கும் என்ற பயம் கலந்த அருவருப்பு.

நமக்கெல்லாம் உடனடியாகத் தேவையான ஒன்று விழிப்புனர்வு. ஒருவருக்கு அடிபட்டாலோ அல்லது அவசர உதவி தேவையென்றாலொ என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையான அவசியமான பயிற்சி தேவை. பதட்டத்தில் தவறு செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது. கோல்டன் அவர்ஸ் எனப்படும் அந்தத் தருணத்தில் நிதானமும் என்ன செய்யவேண்டும் என்ற தெளிவும் மிக முக்கியம்.


  • அனைத்து பள்ளி, கல்லூரி, தனியார் மற்று அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைவருக்கும் தகுந்த இடைவெளியல் இத்தகைய சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி கட்டாயம் தரவேண்டும்.
  • வாகனங்களில் பயணம் செய்பவோர் கட்டாயம் தங்களது ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் இரத்தவகை மற்றும் அவசர தொடர்பு எண் மற்றும் முகவரிகளை வைத்திருக்கவும்.
  • 108 போன்றவர்களை நாம் அழைத்தவுடன் அவர்களே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும், மருத்துவ மனைக்கும் தகவல்களைத் தெரிவிக்கலாம். அவர்களிடம் அவசர ஊர்தி அருகில் இல்லை என்றால் அருகில் உள்ள தனியார் அவசர ஊர்தியை தொர்பு கொள்ளும் வசதி போன்றவை மிக உதவியாக இருக்கும்.
  • அடிபட்டவரையோ அல்லது அவர உதவி தேவைப்படுவோரையோ பார்க்க நேர்ந்தால் தயவு செய்து உங்களது வாகனத்தில் இடமளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுங்கள். அப்பொழுது நீங்கள்தான் கடவுள். உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கருதுங்கள்.


ஏன் இந்த அவசரம். நமது வாழ்க்கையை நாம் தான் வாழ முடியும். அதற்கு நாம் நலமுடன் இருக்க வேண்டும்.


அந்த நண்பர் விரைவில் நலமடைந்து நம்முடன் வாழ இறைவனைப் பிராத்திப்போம்.

முடிந்தவரை நிதானத்துடனும் மனிதாபிமானத்துடனும் வாழ முயற்ச்சிப்போம்.



Wednesday, December 28, 2011

மலரும் நினைவுகள் - 3 (மறக்கத்தான் முடியுமா)


மறக்கத்தான் முடியுமா?


மறக்கத்தான் முடியுமா?
காய்ந்த பேருந்து நிறுத்தத்தில்
நீ மட்டும் பசுமையாய்
நின்ற காலங்களை...

மறக்கத்தான் முடியுமா?
கல்லூரிக்குள் கால்வைத்த
முதல் நாள் முகவரிகளை...

மறக்கத்தான் முடியுமா?
நாம் முதன் முதலில்
பார்த்த திரைப்படத்தை...

மறக்கத்தான் முடியுமா?
நம்மை இணைத்து மற்றவர்கள்
பேசிய வார்த்தைகளை...

மறக்கத்தான் முடியுமா?
உன் திருமணத்தில்
மாப்பிளை தோழனாக
நான் நின்றதை....

அன்பே
நம் நினைவுகளை மட்டுமே
என்னால் மறக்க முடியவில்லை!
உன்னையல்ல...

Tuesday, December 27, 2011

மலரும் நினைவுகள் - 2 (காதல்)

காதல்



சிறகடித்துப் பறக்க நினைத்து
சிந்தனை வயப்பட்டேன்...

மனம் விட்டுப் பேச நினைத்து
மயங்கி நின்றேன்...

சாதனை என்று நினைத்து
சரிந்து விழுந்தேன்...

காதலிப்பதாக நினைத்து
கவிதை மட்டும் எழுதினேன்...


மாறுதல்


தங்கைக்கோ ஆச்சரியம்
தாய்க்கோ பெருமகிழ்ச்சி
தந்தைக்கோ சந்தேகம்...
ஆம்
இப்பொழுது தினமும்
கோவிலுக்குச் செல்கிறேன்
தங்கைக்குத் துணையாக...


Monday, December 26, 2011

படித்ததில் பிடித்தது


நண்பர்களே கீழே தொகுக்கப்பட்டுள்ளது எனது சொந்த சரக்கல்ல. படித்தவைகளில் இருந்து பிடித்தவைகளைத் தொகுத்துள்ளேன்.

"மன உறுதியை சோதனை செய்யவே தோல்விகள் ஏற்படுகின்றன. ஆகவே இத்தகைய சோதனைகளில் நீங்கள் தோற்று விடக்கூடாது"

"உங்களின் நம்பிக்கையின் அளவிற்குத்தான் உங்களால் ஆசைப்பட முடியும். நீங்கள் ஆசைப்படும் அளவிற்குத்தான் உங்களால் அடைய முடியும்"

"வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல. எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே"



"தவறு செய்து விட்டதாக ஒப்புக் கொள்ள வெட்கப்படாதீர்கள். ஒப்புக் கொண்டால் நேற்றை விட இன்று நீங்கள் அதிக புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்"
--அலெக்ஸாண்டர் போப்.

"வேலை, தொடர்ந்த இடைவிடாத கடினமான வேலைதான் நீடித்த பலன்களைக் கொடுக்கும். பாதி முயற்சி செய்தால் பாதிப்பலன் கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். அதில் பலனே கிடையாது"
--ஹாமில்டன் ஹோல்ட்

"தனிமையில் பலசாலி வளர்கிறான். பலவீனன் தேய்கிறான்"
--கலீல் கிப்ரான்

"வேறொருவர் வந்து நமக்கு அமைதியைத் தர முடியாது. வேறொருவர் நம்மை அன்புமயமாக்க முடியாது. வேறொருவர் நமக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் நமக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்ளுவது எப்படி என்று நாமே கற்றுக் கொள்ள வேண்டும்"


"இன்றைய நமது கடமையும் இன்றைய நாளும் மட்டுமே நமக்குச் சொந்தமானவை. பலன்கள் எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன"

"அளவுக்கு மிஞ்சிய தூக்கம், மயக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், எதையும் தாமதமாகச் செய்தல் இவை ஆறும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகளாகும்"
--விதுரநீதி

"பேசாமல் இருப்பது நல்லது. ஆயினும் அவ்வப்போது பேசுவது சிறந்தது. இரண்டு விஷயங்கள் அறிவுக்குப் பொருந்தாதது. பேச வேண்டியபோது பேசாதது. பேச வேண்டாத போது பேசுவது"
-- சாஅதி

"இன்றைய நிகழ்வுகளை அனுபவிப்போம். நாளைய நிகழ்வுகளை வடிவமைப்போம்"


Sunday, December 25, 2011

மலரும் நினைவுகள்

நீண்ட நாட்களாக தவணையிலிருந்த வீடு சுத்தம்செய்யும் வேலையை சென்ற வாரம் செய்ய முடிந்தது. அப்போது வீடு சுத்தமானதுடன் சில பல மலரும் நினைவுளும் கிட்டியது. கல்லூரியில் படித்த காலத்தில் கிறுக்கிய சில கவிதைத் தாள்களும் கிடைத்தன. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.... அதேதான்.... கீழே படியுங்கள்...


எண்ணங்களாக...

வாழ்க்கைப் பயணத்தில்
சில காலம் கூடிய
நினைவுகள்...

உயரப்பறந்து
வானைத் தழுவ நினைத்த
நினைவுகள்...

மெளனங்களின்
புன்னகை வார்த்தைகளால்
புதிருக்கு விடைதேடிய காலங்கள்....

மொத்தத்தில்
கல்லூரி வாழ்க்கை
கரையாத கல்வெட்டாக...

என்றென்றும்
என்னுள்ளே
எண்ணங்களாக....


உதவி

அன்பே
என் இதயத்தை
நீயே வைத்துக்கொள்...

உன் கணவனுக்கு
இல்லையென்றால்
கொடுத்துவிடு...

குறிப்பு: தங்களுக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் அசெளகரியங்ளுக்கும் வருந்துகிறேன்...


Friday, November 18, 2011

நீ ஒரு சுயநலவாதிதானே?



Thursday, November 17, 2011

உலகில் இறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை நம்முடையது

சமீப காலங்களில் இந்தியாவில் அதிக அளவு இளம் குழந்தைகள் இறந்து வருகின்றன என்பது அதிர்ச்சியான தகவல். கடந்த சில நாட்களில் பீகாரில் 38 குழந்தைகள் இறந்துள்ளன. அதிலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பது அதிகரித்து வருகிறது. இது எந்த அளவு என்றால் உலகில் இறக்கும் ஐந்தில் ஒரு குழந்தை நம்முடையது; அதாவது 20%. என்ன கொடுமை என்கிறீர்களா. இது நிதர்சன உண்மை.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை இறப்பு விகிதம் மிகவும் குறைவு. அவர்கள் பிறந்து ஓராண்டு முடிந்த குழந்தைகளுக்கும் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து, ஏதாவது குறையிருப்பின் தேவையான சிகிச்சைகளை சரியாண நேரத்தில் அளித்துவிடுகின்றனர். இதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கட்டுப்படுத்துவதுடன் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கும் இது பேருதவியாக இருக்கிறது.

கீழே தந்துள்ள சில குறிப்புக்கள் குழந்தைகளை ஆரோக்கியமா வளர்க்க உதவும்:


  • குழந்தை பிறந்தவுடன் சீம்பாலை முதல் ஒரு மணிநேரத்திற்குள் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.
  • தாய்மார்கள் கட்டாயம் தாய்ப் பாலை குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் வழங்கவேண்டும். அதிக பட்சமாக ஓராண்டு அல்லது பால் இருக்கும் வரை தரலாம்.
  • தாய்ப்பால் மிகச்சிறந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு அளிக்கிறது.
  • தாய்மார்கள் கர்ப்பம் தரித்த காலம் முதல் ஊட்டச்சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • குழந்தை பிறந்தவுடன் பால் அதிகம் சுரக்கும் வகையில் உள்ள உணவு வகைகளைத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவேண்டும்.



  • வசதியுள்ளவர்கள் தங்களது பகுதியில் உள்ள ஏதாவது ஒரு வசதியற்ற குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்கலாம்.
  • அதி முக்கியமான தடுப்பூசிகளை அரசாங்கம் இலவசமாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கவேண்டும்.
  • அரசாங்க மருத்துவ மனைகளில் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமலிருப்பின், அருகில் உள்ள அத்தகைய மருத்துவ வசதியுள்ள, தனியார் மருத்துவமனைகள் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதியை இலவசமாக வழங்குவதைக் கட்டாயமாக்கலாம் அல்லது செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளலாம்.


ஆரோக்கியமான குழந்தைகளே வருங்கால ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும்.



Wednesday, November 16, 2011

நாட்டு நடப்பு - 2 (ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?)

திங்கள் அன்று காலை சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்தேன். பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகே நிற்காமல் ஆம்னி பேருந்து நிலையத்தினுள் வந்து நின்றது. என் முன்னால் இறங்குவதற்கு நின்ற நபருக்கு அங்கிருந்து அதிக தூரம் நடக்க வேண்டும் என்பதால் பெருங்கோபம் வந்துவிட்டது. ஓட்டுநரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார். ஓட்டுநரும் இன்று ஒருவன் சிக்கிட்டான்யா என்ற தோரனையில் அந்த நபருடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். இதன் முடிவில் ஓட்டுநர் கண்டுபிடித்த விசயம் என்ன என்றால் "சட்டம் அனைவருக்கும் பொது". என்ன கொடுமை பார்தீங்களா? சட்டத்தைப்பற்றி யார் யாரெல்லாம் பேசுவது....

நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வர கோயம்பேட்டில் ஒரு பேருந்தில் ஏறினேன். அதிகாலையிலேயே அதிக மக்கள் உள்ளிருந்தனர். இரண்டு கையுடமைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு ஏறி ஒரு இருக்கையின் அருகே நின்றேன். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த யுவதி உடனடியாக என்னிடம் இருந்த மடிக்கணிணியை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார். அவரின் செயல் அந்த கூட்டத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன்னர் நின்றவர்களை நேட்டம்விட்டேன். எனக்கு மிக அருகில் நின்றவர்களில் இருவர் மடிக்கணிணி வைத்துக்கொண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த யுவதி எனக்கு மட்டும் ஏன் உதவ வேண்டும்? ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

அலுவலகங்களில் வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் (நான் அனைவரும் என்று கூறவில்லை) அலுவலகத்திற்கு வந்தவுடன் துப்பட்டாவை கழட்டி வைத்துவிடுகிறார்கள். வீட்டிற்குச்செல்லும் முன் அணிந்து கொள்கின்றனர். அலுவலக்தில் ஏற்ககுறைய ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்கின்றனர். ஆனால் பேருந்தில் வீட்டிற்குச் செல்லும் வழியில் அதிகபட்சம் சுமார் ஐநூறு பேரைத்தான் கடந்து செல்லவேண்டியிருக்கும். பிறகு ஏன் இப்படி என்று புரியாமல் என்னுடன் பணிபுரியும் நண்பரிடம் கேட்டதற்கு உமக்கு வயசாகிவிட்டது, வயதுக்கு தகுந்த ஆராய்ச்சியை மட்டும் செய்யும் என்றார். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

Monday, November 7, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 3

சில வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியவுடன், எங்கள் பள்ளியின் பெயரைக் கொண்டு தேடியதில், கிடைத்த அந்த நண்பரின் புகைப்படத்தினை கண்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பேஸ்புக்கின் உதவியால் சில நிமிடங்களில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எங்களது பேச்சு சில மணிகள் கடந்தும் தொடர்ந்தது. பல தொடர்புகள் தொலைந்து போன நண்பர்களின் மீள் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நேரம் அவர் நினைவாகவே இருந்தது.

சிறு கடந்த கால அறிமுகம்: பள்ளியில் என்னுடன் விடுதியில் தங்கிப்படித்த அந்த நண்பர் இறுதித்தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றார். நாங்கள் படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம் ஆனால் கடிதம் தவிர ஏனைய தகவல்தொடர்புகள் பிரபலமாகாத காலம் அது என்பதால் பள்ளி இறுதி வகுப்பிற்குப் பின் அவருடன் தொடர்புகொள்ள இயலாமல் போய்விட்டது. அவர் பெற்ற தோல்வியும், மற்றவரிடம் தொடர்பு கொள்ள இயலாத மனநிலையை அவருக்கு ஏற்றபடுத்தி விட்டது. அந்த காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் ஏராளம்.

அதன்பிறகு மனம் தளராமல் அடுத்த ஆண்டு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற்று, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளையும் முடித்து விட்டார். தற்சமயம் திருமணம் முடித்து அமெரிக்காவில் அவர் துறைசார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் பட்ட அவமானங்களும் வேதனைகளும் இன்றும் அவரின் நினைவில் உள்ளது.

தேர்வில் தோல்வியடைவதை, வாழ்வில் தோல்வியடைவதைப்போல் ஏன் சமுதாயம் சித்தரிக்கவேண்டும். இதன் உச்சகட்டம் தான் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது. சமீப காலங்களில் இத்தகைய தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவன் தேர்வில் தோல்வியடையும் போது இச்சமுதாயமும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும். பாடத்தில் தோல்வி என்பது வாழ்க்கையின் தோல்வி அல்ல. வாழ்க்கையில் சிறு தடைதான். அதிலிருந்து அவன் மீள்வதற்குரிய சூழ்நிலையை நாம் உருவாக்கித் தர வேண்டுமே தவிர அவனை குற்ற உணர்ச்சியில் தவிக்க விடக்கூடாது.

பள்ளித் தேர்வுத் தோல்வியை ஏளனமாக்குபவர்களுக்கு என் நண்பனின் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Thursday, November 3, 2011

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?



கருப்பையைத் தொலைத்து குழந்தையானேன்
குழந்தையைத் தொலைத்து சிறுவனானேன்
சிறுவனைத் தொலைத்து இளைஞனானேன்
இதயத்தைத் தொலைத்து காதலனானேன்
காதலைத் தொலைத்து கவிஞனானேன்
இளைஞனைத் தொலைத்து கணவனானேன்
காலத்தைத் தொலைத்து முதியவனானேன்
உயிரைத் தொலைத்து கல்லறையானேன்

இழப்பதென்பது ஒரு தொடர்கதையோ?

Tuesday, November 1, 2011

விளம்பரம் முக்கியம் அமைச்சரே!

இந்த தீபாவளிக்கு எங்களது பகுதியில் இரண்டு பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகின. நல்ல விசயம் தான், மக்களின் பொழுதுபோக்குக்காக இந்தப் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் நான் வருத்தப்படும் ஒரு செய்தியும் இதில் உள்ளது. இது இந்த இரண்டு திரைப்படங்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இப்பொழுது வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் இது பொருந்தும்.

மொக்கை போடாமல் விசயத்திற்கு வருகிறேன். ஒவ்வொரு திரையரங்கின் முன்பும் சராசரியாக 10 முதல் 15 பெரிய அளவிளான விளம்பரங்கள் அந்தந்த நடிகர்களின் மன்றங்களின்(வேண்டும் என்றே நற்பணி என்ற வார்த்தை உபயோகம் தவிர்க்கப்பட்டுள்ளது) சார்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு விளம்பரங்களையும் அச்சடிக்க மற்றும் வைக்கும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் 3000 முதல் 5000 வரை வரும். ஒரு திரையரங்கில் சுமார் 10 விளம்பரங்கள் சராசரியாக ரூபாய் 3500 விலையில் வைக்கப்பட்டது எனில் மொத்தம் ரூபாய் 35,000 செலவு ஆகியிருக்கும். தற்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் சுமார் 500 முதல் 700 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. நம் கணக்கிற்கு 500 திரையரங்குகள் என்று எடுத்துக் கொண்டாலும் ரூபாய் ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் வருகிறது. (1,75,00,000). இது ஒரு நடிகரின் ஒரு திரைப்படத்திற்கான தமிழ்நாட்டிற்குள் செலவிடும் தொகை பற்றிய கணக்கு. ஆண்டு முழுவதும் எவ்வளவு திரைப்படங்கள் வெளிவருகிறது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த செலவு எந்த வகையிலும் நம் சமுதாயத்திற்கு பயன் தரக்கூடியது அல்ல. ஆகவேதான் நான் இவைகளை நற்பணி மன்றங்கள் அல்ல என்று கூறினேன். என்னுடைய வாதம் இவர்கள் நடத்துவது நற்பணி மன்றமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல. இப்படி விளம்பரங்கள் வைப்பதின் நோக்கம் என்ன அவை நிறைவேறியதா என்பதைப் பற்றி தான்.

ஏற்கனவே அந்த நடிகர்கள் பிரபலம். திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே ஏதாவது ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சி வாங்கி அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களும் ஏராளம். மன்றங்கள் சார்பில் வைக்கப்படும் விளம்பரங்கள் முழுக்க முழுக்க வைப்பவர்களை விளம்பரப் படுத்திக் கொள்ளவே. இவ்வாறு விளம்பர தட்டிகளால் கிடைக்கும் விளம்பரம் நிச்சயம் தற்காலிகமானது தான். திரைப்படம் நன்றாக இல்லை என்றாலோ அல்லது திரையரங்கில் வேறு திரைப்படம் வெளிவந்தாலோ உடனே தட்டிகள் மாற்றப்படும்.

இந்த நடிகர்களின் மன்றங்கள் ஒருங்கினைந்து வெட்டி செலவுகள் மற்றும் விளம்பரங்களைத் தவிர்த்து நற்பணிகளுக்காக செலவிட்டால் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பல அதன் மூலம் இவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் நிரந்தரமானது.

இன்றைய நிலவரப்படி எத்தனையோ அரசுப் பள்ளிகளுக்கு போதுமான கட்டமைப்புகளும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. ஆசிரியர் பயிற்சி முடித்து அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் சொற்ப சம்பளத்தில் பணியில் உள்ளனர். நடிகர் மன்றங்கள் அரசு பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் உதவியுடன் அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களின் தகுதிக்கேற்ப தேவைப்படும் அரசு பள்ளிகளுக்கு பாடம் சொல்லித் தருவதற்குரிய ஊதியங்களை வழங்கினால் போதும். ஒரு தற்காலிக ஆசிரியருக்கு ரூபாய் 8,000 மாத சம்பளம் வழங்கினால் ஆண்டுக்கு ரூபாய் 96,000 வரும். ஒரு படத்திற்கு செலவாகும் தொகையைக் கொண்டு சுமார் 200 ஆசிரியருக்கு ஒரு ஆண்டு முழுவதும் சம்பளம் வழங்க முடியும். ஒரு ஆசிரியரால் 30 மாணவர்கள் பயன் பெற்றாலும் கூட சுமார் 6000 மாணவர்கள் பயன் பெற முடியும். உதவி பெறும் அந்த ஆசிரியரும், மாணவர்களும், அவர்கள் சார்ந்த குடும்பங்களும் நிச்சயம் வாழ்க்கை முழுவதும் அந்த மன்றங்களை மறக்க மாட்டர். இவ்வாறு கிடைக்கும் விளம்பரம் நிச்சயம் தற்காலிகமானது கிடையாது. அந்த பள்ளிகளில் வேண்டுமானால் இவர்கள் விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொள்ளட்டும்.

நடிகர் மன்றங்கள் வைக்கும் விளம்பரங்கள் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டுமே தவிர முகம் சுழிக்க வைப்பதாக இருக்கக்கூடாது.

Thursday, October 27, 2011

இழப்பு

மண்ணெண்ணைய்
நெருப்பில் எரியும்
புது மனைவியின்
தவிப்பு....

பெற்றோரை
இழந்த
குழந்தையாய்
என் மனம்....

ஊமையின்
உணர்ச்சியை
அறியத்துடிக்கும்
குருடனின் நிலை....

ஜாதிச் சண்டையும்
கள்ள ஓட்டும்
அனுகுண்டு சோதனையும்
அரசியல் விளையாட்டும்
கார்கில் யுத்தமும்
புகைவண்டி விபத்தும்
ஒரிசா புயலும்
குஜராத் பூகம்பமும்
கலிகாலத்தின்
நிலை தான்
என்னுள்ளும்....

அன்பே
உன்னைப்
பிரிந்த போது...

குறிப்பு: இது சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் படித்தபோது எழுதியது.

Saturday, October 22, 2011

அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்?

ஓய்வெடுக்க நினைத்த போதுதான்
தெரிந்தது நின்ற இடம்
கல்லறை என்று...
அரக்கப்பரக்க வராமலிருந்திருந்தால்
அனுபவித்தாவது வாழ்ந்திருக்கலாம்...


குறிப்பு: நீண்ட நாட்களுக்குப்பின் கவிதையெழுத ஒரு சிறு முயற்சி. உங்களின் கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமிடவும்.

Friday, October 21, 2011

டீனேஜ் வயதினருக்குப் பிடிக்காத வாக்கியம் / அறிவுரை?

எவரையும் மனசுக்கு வெளியே ஒரு அடி தள்ளி வைத்துப் பழகும்போது ஏதும் பிரச்சணைகள் வருவதில்லை. அதேசமயம் அவரை மனதிற்குள் வைக்கும் போதுதான் எல்லா பிரச்சணைகளும் வருகின்றன. யாரை மனதிற்குள் வைப்பது, யாரை வெளியே வைப்பது என்றும் தெளிவாக இருங்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை காதலி மிகவும் புத்திசாலியாகவும் மனைவி முட்டாளாகவும் இருக்க விரும்புவர்.

டீனேஜ் வயதினருக்குப் பிடிக்காத வாக்கியம் / அறிவுரை - "பருவத்தில் பன்னி குட்டி கூட அழகாக இருக்கும்". என் பதின்ம வயதில் எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை.

அப்பெண் என்னை காதலிப்பதாக என் தோழி மூலம் அறிய நேர்ந்தது. பல வருடங்களாக நல்ல நண்பராகத்தான் அப்பெண் எனக்கு இருந்துள்ளார். பல காரணங்களால் என்னால் அக்காதலை ஏற்ற முடியவில்லை என்று கூறிய பின் என்னுடன் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். நானும் கட்டாயப்படுத்தவில்லை. நட்புக்கு அடுத்த நிலைதானே காதல். அக்காதல் கைகூடாதபோது நட்பை ஏன் தொடர முடிவதில்லை?

இந்தியா ஊழல் நாடு லஞ்சத்தை ஒழிக்கவேண்டும் என்று முழங்கும் நாம், நம் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் போது தரும் கையூட்டை வசதியாய் மறந்துவிடுகிறோம். ஏன்?

Tuesday, October 18, 2011

பண்டிகைகள் அதன் சுயத்தை இழந்துவிட்டதா?

எப்பொழுது தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்தினேன் என்று தெரியவில்லை. சிறு வயதுகளில் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னமே அட்டவணை தயாரித்து அப்பாவின் சம்பளம் அல்லது போனஸ் பணம் வந்தவுடன் பட்டாசுகளை வாங்கி வந்து தங்கையுடன் சண்டையிட்டு பங்கு பிரித்து கொண்டு அதை தினமும் எடுத்துப் பார்த்துக்கொண்டு தீபாவளி வரும் நாளுக்காக ஏங்கிக்கொண்டிருந்த காலங்கள் இப்பொழுது இல்லை. அத்தனை ஆர்வங்களும் சட்டென மறைந்து விட்டது. எத்தகைய அபாயகரமாண வெடியையும் கையில் பிடித்துவெடித்த லாவகம் இப்பொழுது மற்றவர்கள் வெடிப்பதை பார்ப்பதே கொஞ்சம் பயமாகவும் மாறிவிட்டது. முன்பெல்லாம் பண்டிகைக்கு அடுத்தநாள் கூட்டி ஒதுக்கிவைத்திருக்கும் பட்டாசு குப்பைகளின் குவியலைப்பார்க்கும் போது ஏற்பட்ட ஒருவித கர்வம், சந்தோஷம் இப்பொழுது எரிச்சலாக மாறிவிட்டது. எதற்கு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கரியாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்குகிறது. பட்டாசு வெடிப்பதற்குப்பதில் ஒரு தீபத்தை ஏற்றி வழிபடலாம். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் கேடு பெருமளவு குறையும்.

தற்பொழுது அனைத்து பண்டிகைகளும் கமர்ஷியல் எனப்படும் வணிக மாய வலைக்குள் சிக்கி அதன் சுயத்தை இழந்துவிட்டது என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனாலேயே பண்டிகையின் மேல் இயல்பாய் ஏற்படக்கூடிய ஈர்ப்பு வராமலேயே போய்விட்டது.

முன்பெல்லாம் காலையில் குளித்து முடித்தவுடன் அம்மா ஒரு கட்டு லட்சுமி வெடியை கொடுத்து சாங்கியத்திற்காகவாவது வெடி என்று கூறுவார்கள். இப்பொழுதெல்லாம் அந்த வற்புறுத்துதல் கூட குறைந்து விட்டது.

பண்டிகையின் மேல் நமது தொலைக்காட்சிகளுக்கு இருக்கும் பொறுப்பும் அக்கறையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. ஒரு பட்டிமன்றம், இரண்டு திரைப்படம், கலைக் கூத்தாடிகளின் பேட்டி என்று இவர்கள் சம்மந்தப்படுத்தும் விசயங்கள் அந்த பண்டிகையின் பெருமைக்கு எவ்விதத்திலும் துணைபுரியப் போவதில்லை.

உறவினர்களின் வருகை கூட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்து விட்டது. பிறகெப்படி அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பண்டிகையின் அருமை பெருமை மற்றும் வரலாற்றை கொண்டு போகப்போகிறோம்.

Friday, October 14, 2011

திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானதா?

கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவனது இல்லத்தில் சில நாட்களுக்கு முன் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த நான்கு ஆண்டுகளில் அவன் சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்கிவிட்டான். திருமணமும் முடிந்து ஒரு குழந்தையுடன் வாழ்க்கை சந்தோஷமுடன் செல்வதையறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.

நீண்ட நேரம் அவனுடன் உரையாடியதில் கீழ்க்கண்ட விசயங்கள் பெரும்பாலானவர்களுக்கும் பொருந்தும் என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன். இது நண்பனின் வாழ்க்கையை பற்றியது அல்ல. பொதுவானது.

கணவன் அல்லது மனைவி இருவரும் தன் துணையின் மேல் ஆளுமை / ஆதிக்கம் செலுத்துவதைவிட்டு அன்பு செலுத்தவேண்டும். ஆளுமை / ஆதிக்கம் ஒரு போதை.

சூழ்நிலைக்கு ஏற்ப குடும்ப பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பொறுப்புக்களை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றுங்கள்.

துணையின் இயலாமையை விமர்சனம் செய்யாதீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.

நாம் மற்ற விசயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தன் துணையின் சிறு சிறு உணர்வுகளுக்கும் தரவேண்டும். சிறு விரிசல்கள் தான் ஒரு நாள் மொத்தத்தையும் தகர்த்துவிடும்.

எப்போதும் நாம் நம் துணைக்கு மருந்தாக இருக்கவேண்டுமே தவிர ஒரு போதும் பிணியாக மாறக்கூடாது.

அல்ப காரணங்களுக்காக திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானது.

கணவன் அல்லது மனைவி இருவரும் ஒரு குடும்ப எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் மற்ற உறவுகளின் ஆதிக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

பேசுங்கள். மனது விட்டு அன்புடன் பேசுங்கள். ஒரு துணை பேச ஏங்கும்போது தவறாமல் பேசுங்கள். நீங்கள் பேசும் விசயம் உங்களின் துணையை காயப்படுத்தும் என்றால் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். நிச்சயம் நீங்கள் பேச விரும்பிய விசயத்தை உங்களின் துணையை காயப்படுத்தாமல் சொல்லமுடியும். கற்றுக்கொள்ளுங்கள்.

எப்போதும் எக்காலத்துக்திலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஒரு நிலை திருமண வாழ்வில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களின் குழந்தைகளின் முன்பு தயவுசெய்து சண்டையிட்டுக்கெள்ளாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள குற்றம் குறைகளை குழந்தைகளிடம் கூறிக்கொண்டிருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒரு உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.

உறவுகள் மற்றும் நண்பர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ளவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு 1: இங்கு நான் துணை (துணைவி அல்ல) என்று எழுதியிருப்பது ஆண் மற்றும் பெண் இருவரையும் பொதுவாக குறிப்பிடவே.

குறிப்பு 2: இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். வாய்ப்பிருந்தால் உங்களின் கருத்துக்களுக்குப் பிறகு அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

உங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் என் எழுத்துக்களுக்கு உரம்.

Thursday, October 13, 2011

ஒரு சிறிய நினைவுகூறல் - 2

1996 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில், பள்ளிக்குச் சொந்தமான விடுதியில் தங்கி பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அது ஒரு கண்டிப்பான விடுதி மற்றும் காப்பாளர்களைக் கொண்டது. பள்ளி முடிந்த பின் தனி வகுப்புகளுக்குச் செல்ல மாலை ஆறு மணிவரை அனுமதியுண்டு. தேர்வுகள் அல்லாத சமயங்களில் சனிக்கிழமை முதல் காட்சி திரைப்படத்திற்கு சென்று வர அனுமதியுண்டு.

ஒரு முறை எனக்கு சிறிது உடல்நலம் சரியிலை. மருத்துவரிடம் சென்று வரவேண்டும் என்று விடுதி காப்பாளரிடம் (மிகவும் கண்டிப்பானவர்) சிறப்பு அனுமதிபெற்று (வயிறு வலிக்கிறது என்று சொல்லி) மாலை ஏழு மணிக்குமேல் வைத்தியரிடம் சென்றேன். துணைக்கு என் அறை நண்பர் ஒருவரும் வந்தார். நாங்கள் சென்றது தெரிந்த ஒரு சித்த மருத்துவரிடம். காலையில் சரியாகிவிடும் என்று சொல்லி அவரிடம் இருந்த மருந்தை சுடுநீரில் கலந்து பருகச்சொன்னார்.

விடுதிக்குத் திரும்பும் வழியில் சரவணா ஹோட்டல் கண்ணில் படவே நண்பனுடன் சென்று கொத்து பரோட்டா இரண்டு சொல்லிவிட்டு ஒரு மேஜையில் வந்து அமர்ந்தோம். நாங்கள் ஏதோ பேசிக் கொண்டே அருகில் அமர்ந்திருந்தவரை கண்டவுடன் இருவரின் முகமும் வெளிரிவிட்டது. அவர் எங்களின் விடுதிக் காப்பாளர். அதற்குள் கொத்து பரோட்டா வந்துவிடவே எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (வயிற்று வலி என்று சொல்லித்தான் விடுதியை விட்டு வெளியே வந்தோம். மேலும் விடுதியில் தங்கிவிட்டு வெளியில் சாப்பிட அனுமதியில்லை). நாங்கள் முழிப்பதைப்பார்த்த அவர் சாப்பிடுங்கள் என்று சொன்னார். வாழ்க்கையில் அவ்வளவு விரைவாக கொத்து பரோட்டாவை நான் சாப்பிட்டதில்லை. விரைவில் விடுத்திக்கு வந்து படுத்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த காப்பாளர் பார்த்தாரே ஒரு பார்வை, இன்றைக்கும் மறக்க முடியவில்லை. பிறகு அடுத்த நாள் அந்த சித்த மருத்துவரை விடுதிக்கு அழைத்துவந்து காப்பாளரிடம் பேசவைத்த பிறகே அவருக்கு எங்கள் மேல் நம்பிக்கை வந்தது. வயிற்று வலியும் கொத்து பரோட்டாவும் அடிக்கடி இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது.

குறிப்பு: எங்களிடம் கண்டிப்பு காட்டிய அந்த காப்பாளர் மட்டும் ஏன் விடுதியில் சாப்பிடாமல் அந்த ஹோட்டலில் சாப்பிடவேண்டும். யார் அவரை கண்டிப்பது?

Wednesday, September 28, 2011

நாட்டு நடப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தேன். என் அருகில் ஒரு மத்திய வயதொட்டிய தம்பதியினர். விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் அவருக்கு வந்த அழைப்பில் பேசியவர் நான் இப்போது கொல்கத்தாவில் இருக்கிறேன் என்றார். செல் பேசியல் பொய் பேசினார்.

கோவை விமான நிலையத்திற்கு வருவதற்காக அரசு பேருந்தில் (Town Bus) ஏறி பத்து ரூபாய் தந்து பணசீட்டு கேட்டேன். விமான நிலையத்திற்கு கட்டணமாக ஐந்து ரூபாய் சில்லரையாக வேண்டும் என்றார். என்னிடம் சரியாண சில்லரை இல்லையென்றும் பத்து ரூபாய் மட்டுமே உள்ளது என்றேன். விமான நிலையம் நெருங்கும் வரை சில்லரை இல்லையென்று பயணச்சீட்டை தர மறுத்துவிட்டார். ஆனால் எனக்கு முன் பயணச்சீட்டு வாங்கியவர் ஐந்து ரூபாய் தந்தார். இருந்தும் எனக்கு பயணச்சீட்டு தராமலேயே விமான நிலைய நிறுத்தத்தில் இறக்கிவிட்டுவிட்டார். கட்டணமும் வாங்கவில்லை. அரசு பேருந்து கழகம் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பது புரிந்தது.

கடந்த இரு வாரமாக அலுவலகத்திற்குச் செல்ல காலையில் பேருந்தில் பயணிக்கின்றேன். பேருந்து கட்டணம் மூன்று ரூபாய் ஐம்பது காசுகள் (ரூபாய் 3.50). ஐந்து ரூபாய் தந்தால் ஒரு ரூபாய் தான் திருப்பி தருவார் ஐம்பது காசு தந்ததே இல்லை. இரண்டு நாட்கள் முன்பு ஐம்பது காசை கேட்டதற்கு என்னை மேலும் கீழூம் பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டார். இன்று அதே நடத்துனர், அதேபோல் ஒரு ரூபாய் தான் திருப்பி தந்தார். நான் அவரிடம் இரண்டு நாட்கள் முன்பு கூட நீங்கள் ஐம்பது காசு தரவில்லை, இன்றையதையும் சேர்த்து ஒரு ரூபாய் தாருங்கள் என்றேன். கொடுத்துவிட்டார். கேளுங்கள் தரப்படும்.
குறிப்பு: பேசாமல் அரசாங்கம் அனைத்து பேருந்து கட்டணங்களையும் முழு ரூபாய்யாக மற்றிவிடலாம், நஷ்டமாவது சிறிது குறையும்.