படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Monday, February 1, 2010

சிக்கனமும் ஒரு சேமிப்பே!

உலகப் பொருளாதார மந்தம், வேலையிழப்புக்கள், உணவுப் பற்றாக்குறை, உயரும் உணவுப் பொருள்களின் விலை, பலம் பெற்றுக் கிளம்பிக் கொண்டிருக்கும் புதுப் புது நோய்கள், கட்டுக்கடங்காத பணவீக்கம், மாறிவரும் தட்பவெப்ப/பருவ நிலைகள் - இவைகள் சமீப காலங்களில் நம் கவனத்தை அதிகம் ஈர்ப்பவை. மனித குல வரலாற்றைப் படித்தவர்களுக்கு இவையாவும் புதியவை இல்லை என்றாலும் தற்பொழுதுள்ள சூழ்நிலைகளில் இவற்றினை ஒதுக்கிவிட முடியாதுதான். 

உணவுப் பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும்:

நாம் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணை வகை உள்பட அனைத்து பொருள்களின் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டன. உதாரணத்திற்கு துவரம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஓராண்டிற்கு முன் 40 முதல் 45 ரூபாய்க்கு விற்கப்பட்டது தற்பொழுது 75 முதல் 90 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரு மடங்கு விலையேறிவிட்டது. 

பணவீக்கம்: 

இன்று உங்கள் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 15 ஆயிரம் செலவாகிறது என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் 6% பணவீக்கத்தில் கணக்கிட்டால் ரூபாய் 20 ஆயிரம் தேவைப்படும். 35 ஆண்டுகள் கழித்து (ஓய்வு வயதில்) தேவைப்படும் தெகை ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரம். நம் அரசாங்கத்தின் கணக்குப்படி கடந்த வருடத்தின் சராசரியான பணவீக்கம் என்பது 10.45%. அப்படிப் பார்த்தால் இன்னும் ஐந்து வருடங்களில் தேவைப்படும் தெகை ரூபாய் 25 ஆயிரம். 35 ஆண்டுகள் கழித்து தேவைப்படும் தெகை ரூபாய் 4 லட்சத்து 86 ஆயிரம். இந்த பணம் ஒரு மாதத்திற்கு தேவையானது. 

வேலையிழப்பின் போதோ அல்லது ஓய்வுக்காலங்களின் போதோ உங்களுக்கு மாதம் ரூபாய் 15 ஆயிரம் வருமானம் வேண்டும் என்றால் 20 லட்சங்களை சாரசரியாக 9% வட்டியில் வைத்திருக்க வேண்டும். மாதம் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வருமானம் வேண்டும் என்றால் சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாயை சாரசரியாக 9% வட்டியில் வைத்திருக்க வேண்டும். இதனுடன் சொந்த வீடு, குழந்தைகளின் கல்வி, எதிர்பாராத மருத்துவச் செலவு போன்ற செலவுகளையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

காரணம் எவையாக இருப்பினும் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தானே?

சிக்கனமும் சேமிப்பும்: 

சிக்கனமும் சேமிப்பும் குடும்பப் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று நம்மில் பலர் நல்ல முறையில் சிக்கனத்தையும் சேமிப்பையும் கடைபிடித்து வருகிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. வங்கி சேமிப்பு, பங்கு வர்த்தகம் சார்ந்த சேமிப்பு, தங்க நகை சேமிப்பு போன்றவைகள் போல சில சேமிப்புக்கள் இங்கே. 

என் உறவினர்கள் வருடத்திற்கு ஒருமுறை அரிசி, பருப்பு (துவரை, தட்டை, உளுந்து, பச்சைப் பயறு), தானியம், புளி, மிளகாய், மஞ்சள் போன்ற பொருள்களை அவைகளின் விளைச்சள் காலங்களில் கிராம சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி, பங்கிட்டு, சேமித்து பயன்படுத்துவதை ஆச்சர்யமாகப் பார்த்துள்ளேன். 

100 கிராம் துவரம் பருப்பு வாங்கும் விலைக்கும் 1 கிலோ துவரம் வாங்கும் விலைக்கும் 100 கிலோ துவரம் வாங்கும் விலைக்கும் விலை வித்தியாசம் அதிகம். அதே போல் மொத்தமாக வாங்கும் போது நாம் கணிசமாக சேமிக்கவும் முடியும். சட்டென்று உயரும் விலைவாசியும் நிச்சயம் நம்மை பாதிக்காது. எப்பொழுது எங்கு வாங்குவது, எப்படி பதப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான அறிவு நிச்சயம் உதவும். 

குடும்ப மருத்துவக் காப்பீடு அவசியம். "எனக்குத்தான் என் நிறுவனம் குடும்ப மருத்துவக் காப்பீடு அளித்துள்ளதே" என்ற உங்களது நியாமான கேள்வி புரிகிறது. வேலை இழந்தாலோ ஓய்வு பெற்றாலோ நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு பயன்தராது. அதே சமயம் "Pre Existing Dieses" என்று சொல்லப்படுகின்ற நோய்களுக்கு உண்டான காப்பீடு, நீங்கள் நிறுவனம் மாறும் போது ரத்தாகிவிடும். இத்தகைய சிக்கல்களில் இருந்து விடுபட கூடுதலாக ஒரு மருத்துவக் காப்பீடு ஒன்றை எடுத்துக்கொள்வது நலம். அதை தொடர்ந்து புதுப்பித்து வரவும். 

தகுந்த திட்டமிட்ட ஆயுள் காப்பீடு. உங்களது ஆண்டு வருமானத்தைப்போல் குறைந்த பட்சம் 5 முதல் 10 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு அவசியம். டேர்ம் (Term Insurance) ஆயுள் காப்பீட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும். குறைவான பிரிமியம் தொகையில் அதிக காப்பீடு கிடைக்கும். 

வரவு செலவுகளை தினமும் எழுதுங்கள். ஒரு ரூபாய் வரவு அல்லது செலவு என்றாலும் தவறாமல் எழுதி வாருங்கள். ஆறு மாதத்தில் நிச்சயமாக உங்களின் நிதி நிலைமை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து சேமிப்பு உயரும். குழந்தைகளுக்கு சேமிக்கவும், வரவு செலவு எழுதுவதையும் கற்றுக் கொடுத்து ஊக்கப் படுத்துங்கள். உங்களது வரவு செலவு குறிப்புகளை குடும்ப உறுப்பினர் அனைவரும் படிக்க அனுமதியுங்கள். சேமிக்கவும் சிக்கனமாக இருக்கவும் குடும்ப உறுப்பினர்களின் புரிதல் அவசியம். 

உபயோகப்படுத்திய பொருள்களை பாதுகாத்து வையுங்கள். மறுபயன்பாட்டிற்கோ அல்லது மற்றவர்களுக்கோ பயன்படும். நான் குழந்தையாக இருந்த போது பயன்படுத்திய நடை பழகும் வண்டி (மரத்தால் செய்யப்பட்டது) என் குடும்பத்தில் மற்றொருவர் பயன்படுத்தியது. எனக்குப் பிறகு என் தங்கையும், என் தங்கைக்கு பிறகு என் மாமா குழந்தைகளும் பயன்படுத்தினர். இன்றும் அந்த வண்டி அடுத்த பயன்பாட்டிற்குத் தயராகவே உள்ளது. 

அவசியமே இல்லாமல் வருடத்திற்கு ஓரிரு முறை அலை பேசியை "cell phone" மாற்றிய, ஒவ்வொரு மாதமும் தேவைக்கு மேல் துணிகளை எடுத்த, தினமும் இரண்டு வேளை உணவை (வீட்டில் அம்மா சமைத்துக் கொடுத்தாலும்) விலையுயர்ந்த உணவு விடுதிகளில் உண்ட, என் நண்பன் (நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்) சமீபத்தில் வேலையிழந்து தடுமாறிய போது எற்பட்ட தாக்கத்தில் எழுதியது. அவன் சொன்ன ஒரு வாக்கியம் அப்படியே இங்கே "நான் வாங்கிய cell phone களை வாங்காமல் பணத்தை சேமித்திருந்தால் வேலையில்லாமல் இருந்த இந்த ஒன்பது மாதங்களுக்கு அது குடும்பத்தை காப்பாற்ற உதவியிருக்கும்". 

சிக்கனமும் சேமிப்பும் நிச்சயம் கேலிப் பொருளள்ள! 

--லிங்கேஷ்.

3 comments:

Anonymous said...

Lingesh,
I am the first one to comment this one. Interesting and useful one.

GR said...

Hi
really useful one.

Lingesh said...

Thank you Gowthaman and Anonymous.

Post a Comment