படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.
Showing posts with label துணைவி. Show all posts
Showing posts with label துணைவி. Show all posts

Friday, October 14, 2011

திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானதா?

கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவனது இல்லத்தில் சில நாட்களுக்கு முன் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த நான்கு ஆண்டுகளில் அவன் சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்கிவிட்டான். திருமணமும் முடிந்து ஒரு குழந்தையுடன் வாழ்க்கை சந்தோஷமுடன் செல்வதையறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.

நீண்ட நேரம் அவனுடன் உரையாடியதில் கீழ்க்கண்ட விசயங்கள் பெரும்பாலானவர்களுக்கும் பொருந்தும் என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன். இது நண்பனின் வாழ்க்கையை பற்றியது அல்ல. பொதுவானது.

கணவன் அல்லது மனைவி இருவரும் தன் துணையின் மேல் ஆளுமை / ஆதிக்கம் செலுத்துவதைவிட்டு அன்பு செலுத்தவேண்டும். ஆளுமை / ஆதிக்கம் ஒரு போதை.

சூழ்நிலைக்கு ஏற்ப குடும்ப பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பொறுப்புக்களை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றுங்கள்.

துணையின் இயலாமையை விமர்சனம் செய்யாதீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.

நாம் மற்ற விசயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தன் துணையின் சிறு சிறு உணர்வுகளுக்கும் தரவேண்டும். சிறு விரிசல்கள் தான் ஒரு நாள் மொத்தத்தையும் தகர்த்துவிடும்.

எப்போதும் நாம் நம் துணைக்கு மருந்தாக இருக்கவேண்டுமே தவிர ஒரு போதும் பிணியாக மாறக்கூடாது.

அல்ப காரணங்களுக்காக திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானது.

கணவன் அல்லது மனைவி இருவரும் ஒரு குடும்ப எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் மற்ற உறவுகளின் ஆதிக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

பேசுங்கள். மனது விட்டு அன்புடன் பேசுங்கள். ஒரு துணை பேச ஏங்கும்போது தவறாமல் பேசுங்கள். நீங்கள் பேசும் விசயம் உங்களின் துணையை காயப்படுத்தும் என்றால் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். நிச்சயம் நீங்கள் பேச விரும்பிய விசயத்தை உங்களின் துணையை காயப்படுத்தாமல் சொல்லமுடியும். கற்றுக்கொள்ளுங்கள்.

எப்போதும் எக்காலத்துக்திலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஒரு நிலை திருமண வாழ்வில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களின் குழந்தைகளின் முன்பு தயவுசெய்து சண்டையிட்டுக்கெள்ளாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள குற்றம் குறைகளை குழந்தைகளிடம் கூறிக்கொண்டிருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒரு உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.

உறவுகள் மற்றும் நண்பர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ளவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு 1: இங்கு நான் துணை (துணைவி அல்ல) என்று எழுதியிருப்பது ஆண் மற்றும் பெண் இருவரையும் பொதுவாக குறிப்பிடவே.

குறிப்பு 2: இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். வாய்ப்பிருந்தால் உங்களின் கருத்துக்களுக்குப் பிறகு அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

உங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் என் எழுத்துக்களுக்கு உரம்.