மொக்கை போடாமல் விசயத்திற்கு வருகிறேன். ஒவ்வொரு திரையரங்கின் முன்பும் சராசரியாக 10 முதல் 15 பெரிய அளவிளான விளம்பரங்கள் அந்தந்த நடிகர்களின் மன்றங்களின்(வேண்டும் என்றே நற்பணி என்ற வார்த்தை உபயோகம் தவிர்க்கப்பட்டுள்ளது) சார்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு விளம்பரங்களையும் அச்சடிக்க மற்றும் வைக்கும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் 3000 முதல் 5000 வரை வரும். ஒரு திரையரங்கில் சுமார் 10 விளம்பரங்கள் சராசரியாக ரூபாய் 3500 விலையில் வைக்கப்பட்டது எனில் மொத்தம் ரூபாய் 35,000 செலவு ஆகியிருக்கும். தற்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் சுமார் 500 முதல் 700 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. நம் கணக்கிற்கு 500 திரையரங்குகள் என்று எடுத்துக் கொண்டாலும் ரூபாய் ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் வருகிறது. (1,75,00,000). இது ஒரு நடிகரின் ஒரு திரைப்படத்திற்கான தமிழ்நாட்டிற்குள் செலவிடும் தொகை பற்றிய கணக்கு. ஆண்டு முழுவதும் எவ்வளவு திரைப்படங்கள் வெளிவருகிறது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இந்த செலவு எந்த வகையிலும் நம் சமுதாயத்திற்கு பயன் தரக்கூடியது அல்ல. ஆகவேதான் நான் இவைகளை நற்பணி மன்றங்கள் அல்ல என்று கூறினேன். என்னுடைய வாதம் இவர்கள் நடத்துவது நற்பணி மன்றமா இல்லையா என்பதைப் பற்றியதல்ல. இப்படி விளம்பரங்கள் வைப்பதின் நோக்கம் என்ன அவை நிறைவேறியதா என்பதைப் பற்றி தான்.
ஏற்கனவே அந்த நடிகர்கள் பிரபலம். திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே ஏதாவது ஒரு செயற்கைக்கோள் தொலைக்காட்சி வாங்கி அவர்கள் கொடுக்கும் விளம்பரங்களும் ஏராளம். மன்றங்கள் சார்பில் வைக்கப்படும் விளம்பரங்கள் முழுக்க முழுக்க வைப்பவர்களை விளம்பரப் படுத்திக் கொள்ளவே. இவ்வாறு விளம்பர தட்டிகளால் கிடைக்கும் விளம்பரம் நிச்சயம் தற்காலிகமானது தான். திரைப்படம் நன்றாக இல்லை என்றாலோ அல்லது திரையரங்கில் வேறு திரைப்படம் வெளிவந்தாலோ உடனே தட்டிகள் மாற்றப்படும்.
இந்த நடிகர்களின் மன்றங்கள் ஒருங்கினைந்து வெட்டி செலவுகள் மற்றும் விளம்பரங்களைத் தவிர்த்து நற்பணிகளுக்காக செலவிட்டால் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பல அதன் மூலம் இவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் நிரந்தரமானது.
இன்றைய நிலவரப்படி எத்தனையோ அரசுப் பள்ளிகளுக்கு போதுமான கட்டமைப்புகளும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் இல்லை. ஆசிரியர் பயிற்சி முடித்து அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளிலும் மற்ற இடங்களிலும் சொற்ப சம்பளத்தில் பணியில் உள்ளனர். நடிகர் மன்றங்கள் அரசு பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் உதவியுடன் அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களின் தகுதிக்கேற்ப தேவைப்படும் அரசு பள்ளிகளுக்கு பாடம் சொல்லித் தருவதற்குரிய ஊதியங்களை வழங்கினால் போதும். ஒரு தற்காலிக ஆசிரியருக்கு ரூபாய் 8,000 மாத சம்பளம் வழங்கினால் ஆண்டுக்கு ரூபாய் 96,000 வரும். ஒரு படத்திற்கு செலவாகும் தொகையைக் கொண்டு சுமார் 200 ஆசிரியருக்கு ஒரு ஆண்டு முழுவதும் சம்பளம் வழங்க முடியும். ஒரு ஆசிரியரால் 30 மாணவர்கள் பயன் பெற்றாலும் கூட சுமார் 6000 மாணவர்கள் பயன் பெற முடியும். உதவி பெறும் அந்த ஆசிரியரும், மாணவர்களும், அவர்கள் சார்ந்த குடும்பங்களும் நிச்சயம் வாழ்க்கை முழுவதும் அந்த மன்றங்களை மறக்க மாட்டர். இவ்வாறு கிடைக்கும் விளம்பரம் நிச்சயம் தற்காலிகமானது கிடையாது. அந்த பள்ளிகளில் வேண்டுமானால் இவர்கள் விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொள்ளட்டும்.
நடிகர் மன்றங்கள் வைக்கும் விளம்பரங்கள் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக அமைய வேண்டுமே தவிர முகம் சுழிக்க வைப்பதாக இருக்கக்கூடாது.